அழகு குறிப்புகள் உடல்நலம்

வியக்க வைக்கும் ரோஸ் வாட்டரின் பயன்பாடுகள்…!

ரோஜாத் தீநீர் அல்லது பன்னீர் என்றழைக்கப்படுகின்ற ரோஸ் வாட்டரின் நன்மைகள் ஏராளம்., ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊறவைத்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர், பழங்காலத்திலிருந்தே அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரோஸ் வாட்டரின் சேதமடைந்த சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. ரோஸ் வாட்டர் கிருமிநாசினியாகவும் செயல்படும் என்பதால், சருமத்துக்கு ஏற்படும் தொற்றுப் பாதிப்புகளை ஓரளவுக்கு தடுத்துவிடும். இதன்மூலம் ரோஸ் வாட்டரை சிறந்த சரும டோனர் என்றும் கூறலாம்.

சருமத்தின் இயற்கையான “பிஹெச்” சமநிலையை பராமரிக்க உதவுகிறது. ரோஸ் வாட்டரை நாம் வாரமிருமுறை சருமத்தின் மீது தடவி வந்தால், அவ்வப்போது உருவாகும் அதிகப்படியான சரும உற்பத்தியை கட்டுப்படுத்தும்.

இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், தோல் சிவத்தல், தோல் அழற்சி மற்றும் தோலழற்சி போன்ற பல்வேறு தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

முகப்பரு பிரச்னை கொண்டவர்களும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த கிளென்சரும் கூட. இது அடைபட்ட துளைகளில் இருந்து எண்ணெய் மற்றும் அழுக்குகளை அகற்றும். ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. இது வடுக்கள், காயங்கள் மற்றும் வெட்டுக்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

முடி சம்மந்தப்பட்ட பிரச்னைக்கும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இது லேசான உச்சந்தலையில் வீக்கம் மற்றும் பொடுகுத் தொல்லைக்கு சிகிச்சையளிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ரோஸ் வாட்டரை சிறிது நேரம் குளிர வைக்கவும். அதில் காட்டன் பஞ்சுகளை நனைத்து, உங்கள் கண் இமைகளில் மெதுவாக தடவவும். உங்கள் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாசு மருவில்லாத அழகிற்கும், உடலின் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டுவதாயிருந்தாலும், வயிற்றுப் புண்களை சரிசெய்வதாக இருந்தாலும், பிரசவ நேரத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மலமிளக்கி மருந்துகளிலும் ரோஜாவின் பங்கு பெரிதும் உள்ளது.

இப்போது பலவகையான ஒட்டு ரோஜாக்களும், வாசனை ரோஜாக்களும் இருந்தாலும் மேற்சொன்ன அனைத்து நன்மைகளையும் கொடுப்பது நமது பன்னீர் ரோஜாக்கள் மட்டுமே.

ரோஜாப் பூக்களிலிருந்து எடுக்கப்படும் ரோஸ் வாட்டர் இல்லாமல் இன்றைக்கு எந்த ஒரு அழகு நிலையங்களும் இயங்குவதில்லை.

ரோஸ் வாட்டரை இன்று பல நிறுவனங்கள் தயாரித்து வழங்கினாலும், எந்த ஒரு நிறுவனத் தினாலும் தரமான, உண்மையான ரோஸ் வாட்டர் கொடுக்க முடிவதில்லை. வேண்டுமானால் எந்த ஒரு நிறுவனத்தின் லேபிளை நீங்கள் படித்துப் பார்த்தாலும் அது உண்மையான ரோஸ் வாட்டர் இல்லை என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். வெறும் தண்ணீரில் எசென்ஸை மட்டும் கலந்து ரோஸ் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இது எந்த ஒரு நன்மைகளையும் தராது.

உண்மையான, தரமான ரோஸ் வாட்டர் என்பது புதிய பன்னீர் ரோஜாக்களைக் கொண்டு ஆவி வடித்தல் முறையின் மூலம் செய்யப்படும் முறை மட்டுமே உங்களுக்கு அழகையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும்.

அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்வோம். அப்படி அழகை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர்.

உங்கள் வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அவற்றை அன்றாடம் பயன்படுத்தியே உங்கள் அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கலாம். ஏனெனில் ரோஸ் வாட்டருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. அதிலும் ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

நீங்கள் வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் முகத்தை நீங்கள் சுத்தப்படுத்தலாம்.

ரோஸ் வாட்டரில் சிறிது சூடத்தைப் போட்டு, அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும். இல்லாவிட்டால், ரோஸ் வாட்டரில் புதினா சாற்றை கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால் பருக்கள் நீங்கும்.

முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், சந்தனப் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு, பின் பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி செய்தால், முகத்தின் அழகைக் கெடுக்கும் அசிங்கமான பருக்களைப் போக்கலாம். முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், பருக்கள் நீங்குவதுடன், சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மாற ரோஸ் வாட்டருடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் மாஸ்க் போட்டு, சுமார் ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள் போன்றவை நீங்கும்.

அது போல நீங்கள் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற அவ்வப்போது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

மேலும் உங்கள் சரும கருமை நிறத்தை போக்க ரோஸ் வாட்டருடன், தக்காளி சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி சுமார் பத்து நிமிடங்கள் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால், வெயிலினால் கருமையடைந்த சருமம் மீண்டும் புது பொலிவோடு மாறும். வேண்டுமானால் வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் மாஸ்க் போட்டாலும், வெயிலினால் ஏற்பட்ட சரும கருமை நீங்கும்.

அது போல உங்கள் உதடு ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்க வேண்டுமெனில், தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு உதட்டை துடைத்து எடுங்கள். இதனால் உதட்டில் உள்ள கருமை போய்விடும்.

நீங்கள் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியெனில் வெந்தயத்தை அரைத்து அதில் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, சுமார் அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகுத் தொல்லை நீங்குவதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஷாம்பு போட்டு தலையை அலசியப் பின்னர், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்தாலோ அல்லது ஷாம்புவுடன் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொண்டாலோ, முடி பட்டுப் போன்று பொலிவாக காணப்படும். வேண்டுமெனில் ரோஸ் வாட்டரை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, மசாஜ் செய்து ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் அலசினால், முடி அழகாக மின்னும்.

உங்கள் கண்கள் பொலிவிழந்து கருவளையங்களுடன் காணப்படுகிறதா? அப்படியெனில் காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து, அதனை கண்களின் மேல் வைத்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதோடு, சுருக்கங்கள் வருவதும் தடுக்கப்படும்.

நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்படியெனில் கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி அல்லது சந்தனப் பொடி, இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும். நீங்கள் தக தகன்னு மின்னுவீர்கள்.

Related posts

Leave a Comment