உலகின் மிகப்பெரிய மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பில் அவ்வப்போது யூசர்களின் பாதுகாப்பு கருதி பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் சமீபத்தில் வாட்ஸ்அப் குழு சம்பந்தப்பட்ட பிரைவசி அப்டேட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் குழுக்களில் நீங்களும் ஒரு உறுப்பினராக இருந்தால், இந்த பிரைவசி அம்சங்கள் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
குழுவின் அட்மினுக்கு மட்டுமே உள்ள அனுமதிகள்:
ஒரு வாட்ஸ்அப் குழுவில் யார் வேண்டுமானாலும், குழுவின் விவரங்கள், ஐகான், என்று எடிட் செய்யலாம், குழுவில் எந்த செய்திகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், இவை எல்லாம் குழுவின் அட்மின் மட்டுமே செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டு அம்சம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
ப்ளாக் செய்தல் மற்றும் புகார் அளித்தல்:
வாட்ஸ்அப் குழுவில், அந்த அட்மின் மட்டுமே செய்தி அனுப்ப முடியும் என்ற அம்சம் உள்ளது. ஒரு சில குழுக்களில் அட்மின் மட்டும் அல்லாமல், குழுவில் இருக்கும் அனைத்து மெம்பர்களும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்ற அம்சமும் உள்ளது.
ஒருவேளை, க்ரூப் சாட்டில் யூசர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்தி, வீடியோக்கள் ஆகியவை முறைகேடாக தோன்றினால், நேரடியாக அந்த நபரை பிளாக் செய்யலாம். அல்லது, யூசர்கள் அனுப்பும் செய்தியை வாட்ஸ்அப்பிலேயே புகார் செய்யும் அம்சமும் இருக்கிறது.
மெசேஜ்களை ஃபார்வர்டு செய்வதில் அதிகபட்ச வரம்பு:
வாட்ஸ் அப்பில் நீங்கள் பெறும் ஒரு செய்தியை அதிகபட்சமாக ஐந்து நபர்களுக்கு மட்டும் தான் அனுப்ப முடியும் என்ற வரம்பு ஏற்கனவே அமலில் இருக்கிறது. இது தனி நபர்களுக்கு அனுப்பும் வரம்பாக தான் உள்ளது. ஆனால் வாட்ஸ்அப் குழுக்களைப் பொறுத்தவரை, ஒரு செய்தியை நீங்கள் பலமுறை ஃபார்வர்ட் செய்தால், அது “பலமுறை அனுப்பப்பட்டிருக் கிறது” என்ற ஒரு லேபிளுடன் தோன்றும்.
வாட்ஸ்அப் குழுக்களில் சேர்வது:
யார் வேண்டுமானாலும் எந்த நபரை வேண்டுமானாலும் வாட்ஸ்அப் குழுவில் சேர்த்துவிட முடியாது. உங்களை குழுவில் சேர்க்கும் நபரின் மொபைல் நம்பரை நீங்கள் உங்கள் ஃபோனில் சேமித்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் அந்த நபர் நேரடியாக உங்களை வாட்ஸ்அப் குழுவில் சேர்க்க முடியும்.
இல்லை என்றால் நீங்கள் சேமித்து வைக்காத மொபைல் நம்பரில் இருந்து உங்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் சேர்வதற்கான இன்விடேஷன் மட்டுமே கிடைக்கும். அதேபோல உங்கள் எண்ணை மற்றொரு நபர் சேமித்து வைத்திருந்தால் மட்டும் அவரை நீங்கள் நேரடியாக குழுவில் இணைக்க முடியும்.
குழுவில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறுவது:
வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் சேர்க்கப்பட்டு, ஒரு வேளை அந்த குழு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதை வெளியேறும் பொழுது நீங்கள் குழுவிலிருந்து வெளியேறியது நோட்டிபிக்கேஷனாக அந்த குழுவில் காண்பிக்கப்படும். ஆனால் தற்போது அது மாறி, பிரைவசியை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் குழுவில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறலாம். நீங்கள் வெளியேறும் நோட்டிபிகேஷன் குழுவின் அட்மினுக்கு மட்டுமே காண்பிக்கப்படும்.
ஒரு செய்தி உண்மையா இல்லையா என்று சரிபார்க்கும் அம்சம்:
இந்தியாவில் மட்டுமே, வாட்ஸ்அப்பில் பகிரப்படும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க, பத்து குழுக்கள் இயங்குகின்றன. எனவே, ஒரு செய்தி உண்மையா இல்லையா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.