June 10, 2023
சமையல்

உங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லையா ? அப்படினா இஞ்சி ஊறுகாயை இப்படி செய்து கொடுத்து பாருங்கள்…!

இஞ்சி உணவாகவும் மருந்தாகவும் செயல்படக்கூடியது. இஞ்சியை எந்த வகையில் நாம் உணவில் சேர்த்து வந்தாலும் நம் ஆயுளின் நாட்கள் அதிகரிக்கத் துவங்கும் என்பார்கள்.

இயல்பாகவே குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் பசி இருக்காது. குழந்தைகளின் வயிற்றுப் பகுதியில் சூடாக இருக்கும் நேரத்தில், மலச்சிக்கல் அல்லது செரிமானப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்த சூழலில் குழந்தைகளுக்கு நாம் உணவு கொடுப்பது மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.

அவ்வகையில் குழந்தைகளுக்கு பசி ஏற்படாமல் மந்தமாக இருக்கும் நேரத்தில், இஞ்சி ஊறுகாய்யை நாம் செய்து கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும். இஞ்சி ஊறுகாயை இந்த வழிமுறையை பயன்படுத்தி ஒருமுறை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி – கால் கிலோ

புளி – எலுமிச்சை பழ அளவு

வெல்லம் – அரை கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கடுகு – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

புளியை சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, குளிர்ந்த நீரில் ஊற வைத்துவிட்டு, கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சியை கழுவி, அதன் தோலை நீக்கி விட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சி ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இந்த கலவையில் உப்பு மற்றும் மஞ்சள்தூளை சேர்த்து, புளிக்கரைசலையும் சேர்க்க வேண்டும்.

எண்ணெய் மற்றும் கலவை பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, சூடு ஆறியவுடன், அம்மியில் வைத்து அரைத்து எடுத்தால் இஞ்சி ஊறுகாய் சுவையும் இரட்டிப்பான சுவையில் தயாராகி விடும்.

Related posts

Leave a Comment