முட்டையை பொரியல் அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய ஒரு ருசியான குழம்பு வகையை இன்றைய பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.
பெரும்பாலும் முட்டை குழம்பை நாம் மசாலா அரைத்து ஊற்றி கொதித்தவுடன், அதில் வேக வைத்த முட்டையை போட்டு கொதிக்க வைப்போம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் குழம்பு கொஞ்சம் வித்தியாசமான ஒன்றாகும். சுவையான, சுலபமாக முட்டை உடைத்து ஊற்றி குழம்பை எப்படி செய்வது என்பது பற்றி நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை – ஆறு
பெரிய வெங்காயம் – இரண்டு
தக்காளி – மூன்று
பச்சை மிளகாய் – இரண்டு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்
மல்லித்தூள் – மூன்று ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – அரை ஸ்பூன்
தேங்காய் – அரை முடி
பொட்டுக்கடலை – இரண்டு ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காயைத் துருவலை பொறிகடலையுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அகன்ற கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட்டு தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது இந்த கலவையில் மல்லித்தூள்,மிளகாய்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.
பின் மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கரைசலை சேர்த்து கொஞ்சம் நீர் ஊற்றி கொள்ளவும்.
நன்றாக கொதித்து பச்சை வாசனை சென்றவுடன் ஒவ்வொரு முட்டையாக உடைத்து, அவை ஒட்டி விடாமல் இடைவெளி விட்டு குழம்பில் ஊற்றுங்கள்.
ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் முட்டைகள் வெந்து குழம்பின் மேல் வரும்போது அடுப்பை அணைத்து விட்டால் சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெடி.
இந்த குழம்பை புலாவ், வெஜ் பிரியாணி, சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம்.