இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 2022 அக்டோபர் இருபத்தி நான்காம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று லட்சுமி தேவியை வழிபடுவது மிகவும் நல்லது. குறிப்பாக தீபாவளி நாளில் லட்சுமி மற்றும் விநாயகரை வழிபடுவதால், வாழ்க்கையில் சந்தோஷமும் செழிப்பும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
ஜோதிடத்தில் தீபாவளி நாளன்று லட்சுமி பூஜையுடன் சில பரிகாரங்களையும் செய்து வருவது நல்லதாக கூறப்பட்டுள்ளன. அதுவும் இந்த தீபாவளி பரிகாரங்களை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் செய்து வந்தால், லட்சுமி தேவியின் அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக லட்சுமி தேவி சுத்தமான பகுதிகளில் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் பெண்கள் எந்த இடத்தில் மதிக்கப்படுகிறார்களோ, அந்த இடத்தில் லட்சுமி தேவி வசிப்பாள். இப்போது ஜோதிட சாஸ்திரத்தின் படி, செல்வம் பெருக தீபாவளி நாளில் செய்ய வேண்டிய சில பரிகாரங்களை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
முதல் பரிகாரம்:
தீபாவளி நாளன்று லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமானால், வீட்டு வாசலில் ரங்கோலி, பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும். லட்சுமி தேவி நிரந்தரமாக உங்கள் வீட்டில் வசிக்க வேண்டுமென்று விரும்பினால், வீட்டில் பிரதான கதவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இரண்டாம் பரிகாரம்:
தீபாவளி நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும். மேலும் வீட்டு வாசலை சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக வீட்டு வாசலில் செருப்புக்களானது சிதறி கிடக்காமல், வீட்டு வாசற்படியின் அருகே வைக்காமல், ஓரமாக ஒரு இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். இதனால் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் குடிபுகுவாள்.
மூன்றாம் பரிகாரம்:
தீபாவளி நாளன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, வீட்டின் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், லட்சுமி தேவி உங்கள் வீட்டின் பூஜை அறையில் வந்து வாசம் செய்து அருள் புரிவாள்.
நான்காம் பரிகாரம்:
தீபாவளி அன்று இரவு வெள்ளிப் பாத்திரத்தில் கற்பூரத்தை ஏற்றி லட்சுமி தேவிக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வாழ்வில் சந்திக்கும் பணப் பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுதலை கிடைக்கும்.
ஐந்தாம் பரிகாரம்:
தீபாவளி நாளன்று மாலை வேளையில் அரச மரத்தின் அருகே தெய்வங்களை நினைத்து தீபம் ஏற்றி வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று மனமுருக வேண்டினால், நற்பலன் கிடைக்கும்.
ஆறாம் பரிகாரம்:
தீபாவளி தினத்தன்று லட்சுமி தேவிக்கு பூஜை செய்யும் போது, பச்சை பயறை வேக வைத்து லட்சுமி தேவிக்கு படைக்க வேண்டும். இப்படி செய்வதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஏழாம் பரிகாரம்:
தீபாவளி பண்டிகையானது அமாவாசை நாளில் வருகிறது. எனவே இந்நாளில் வீட்டின் மூலையில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இப்படி செய்வதனால், வீட்டின் வறுமை நீங்கும். மேலும் பேய் போன்ற அமானுஷ்ய விஷயங்கள் அகலும்.