நீங்கள் இந்த மலபார் மட்டன் குருமாவை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் உங்களை கேட்பார்கள். இதில் சேர்க்கப்படும் தேங்காய் எண்ணெயின் சுவை தான் இதன் சிறப்பாகும்.
நாம் மலபார் மட்டன் குருமாவை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – ஐந்து
மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தனியா தூள் – ஒரு ஸ்பூன்
இஞ்சி – இருபத்தி ஐந்து கிராம்
பூண்டு – இருபத்தி ஐந்து கிராம்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
அரைப்பதற்கு:
தேங்காய் – அரை முடி
பட்டை – ஒன்று
லவங்கம் – மூன்று
முந்திரி – பத்து
சோம்பு – ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயை நன்றாக துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் அலசிய மட்டன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
மிக்சி ஜாரில் தேங்காய், முந்திரி பருப்பு, சோம்பு, பட்டை, மற்றும் லவங்கம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடான பின்பு, அரிந்த பெரிய வெங்காயம் கொஞ்சம் சேர்த்து வதக்கி பின் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மீதமுள்ள அரிந்த வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின் அதில் தனியாத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அதன் கார தன்மை செல்லும் வரை வதக்கி விட்டு, வேக வைத்து எடுத்துள்ள மட்டன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து அடுத்து மட்டன் ஷ்டாக் ஊற்றி, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும்.
இறுதியாக வதக்கி தனியாக வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து விட வேண்டும்.
பின் தேங்காய் எண்ணெயை சூடு செய்து குருமாவில் ஊற்றி சுமார் மூன்று நிமிடங்கள் மூடி வைத்து எடுத்தால் தேங்காய் எண்ணெயின் வாசனையில்அட்டகாசமான சுவையில் மலபார் மட்டன் குருமா ரெடி…!