பொருளாதார நெருக்கடி இலங்கையை ஆட்டிப்படைத்து வருகிறது, அத்தியாவசிய பொருட்களான எரிபொருள், உண்வு, மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு. அதிபரைக் காணோம். ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரை முடித்தது, இப்போது, இன்று முதல் பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணி: அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், அசார் அலி, பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், முகமது நவாஸ், யாசிர் ஷா, ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரீடி, நசீம் ஷா.
இலங்கை அணி: ஒஷாதா பெர்னாண்டோ, திமுத் கருணரத்னே, குசல் மெண்டிஸ், அஞ்சேலோ மேத்யூஸ், தனஞ்ஜெய டி சில்வா, தினேஷ் சண்டிமால், நிரோஷன் டிக்வெல்லா, ரமேஷ் மெண்டிஸ், மாஹீஷ் தீக்ஷனா, பிரபாத் ஜெயசூரியா, அஷிதா பெர்னாண்டோ.
கால்லேயில் இன்று காலை பத்து மணிக்கு முதல் டெஸ்ட் தொடங்குகிறது. கடந்த வார இறுதியில்தான் ஆஸ்திரேலியா-இலங்கை போட்டி நடக்கும் போது மைதானத்துக்கு வெளியே கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி தங்கியிருக்கும் விடுதிக்கு அருகே இன்னும் பெரிய போராட்டம் வெடித்தது.
கிரிக்கெட் போட்டிகள் போராட்டம் நடக்கும் இலங்கையில் நடப்பதை எந்த அரசியல்வாதியும் எதிர்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான். ஆர்ப்பாட்டக்காரர்களும் கிரிக்கெட்டை எதிர்க்கவில்லை. அன்னியச் செலாவணி தட்டுப்பாடு இருக்கும் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை வாரியத்துக்கு இரண்டு மில்லியன் டாலர்களை கொண்டு வந்துள்ளது.
நலிந்த சுற்றுலாத்துறையும் இந்தத் தொடரின் மூலம் உயிர் பெற்றது, ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் தொடரும் இந்த வகையில் முக்கியத்துவம் என்று கருதப்படுகிறது, இதோடு ஆசியக்கோப்பை டி20 தொடரையும் இலங்கை நடத்தியே தீருமாம். ஆசியக்கோப்பையும் இலங்கைக்கு வருவாயைக் கூட்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் இன்று தொடங்குகிறது.